திருச்சி மாவட்டம், முசிறியில் கோயிலில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக இருதரப்பினர் வெள்ளிக்கிழமை இரவு மோதிக்கொண்டது தொடர்பாக, 18 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
முசிறி பழைய பேருந்து நிலையம் அருகே மலையப்பபுரத்தில் அழகுநாச்சியம்மன் கோயில் உள்ளது. இதில், வழிபாட்டில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு இருந்துள்ளது. இந்த பிரச்னை குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஒருதரப்பைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை இரவு (ஏப். 21) அழகுநாச்சியம்மன் கோயிலில் உள்ள கடிங்கா மேளத்தை எடுத்துக்கொண்டு பரிசல்துறை சாலையில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலுக்கு சென்றபோது, மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் பரம்பரையாக தாங்கள் எடுத்துச் செல்லும் கடிங்கா மேளத்தை இன்னொரு தரப்பினர் எவ்வாறு எடுத்துச் செல்லலாம் எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இதில், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனராம்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பைச் சேர்ந்த சூரியக்குமார் (36) அளித்த புகாரின் பேரில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த பூபதிராஜா அளித்த புகாரின் பேரில், சூரியக்குமார் தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தையொட்டி, முசிறி மலையப்பபுரம் பகுதியில் அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.