திருச்சி பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 21 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டீன் ஜி. அனிதா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: திருச்சி பல்நோக்கு அரசு மருத்துவமனை சிறப்பாக இயங்கி வரும் சூழலில், தேவைகளை அறிந்து கூடுதல் வசதிகள் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, ரூ.1.85 கோடியில் நவீன சிடி ஸ்கேன் கருவி பெறப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஏற்கெனவே 200 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இப்போது, கூடுதலாக 21 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர்கள் நிலையில் 8 பேர், உதவிப் பேராசிரியர்கள் நிலையில் 13 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 19 பேர் உடனடியாக பணியில் சேர்ந்துள்ளனர். இவைத் தவிர, ரூ.2.50 கோடிக்கு 14 அறுவைச் சிகிச்சை கூடங்களுக்கான நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. மேலும், குடிநோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையிழந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து நல்வழிப்படுத்துவதற்காக ரூ.1.50 கோடியில் மறுவாழ்வு மையமும் விரைந்து அமைக்கப்படும்.திருச்சி பல்நோக்கு அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான அனுமதி பெறப்படும். இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்போது பல்நோக்கு மருத்துவமனையானது தன்னிறைவு பெற்ற மருத்துவமனையாக அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் என்றார் அவர்.