திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மர்மக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளியின் மனைவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மணப்பாறை நகராட்சியின் 5 ஆவது வார்டுக்குள்பட்ட அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பாலகிருஷ்ணன் (35). இவரது மனைவி இந்துமதி (31). கடந்த சனிக்கிழமை முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனயில் செவ்வாயக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை இந்துமதி உயிரிழந்தார்.
அத்திக்குளம் பகுதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்,. டெங்கு காய்ச்சலாக இருககலாம் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கப்பட்டு மழைநீர், குடிநீர் தேக்கமடையும் காரணிகளைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பல ஆண்டுகளாக ஓடுபாதையில்லாமல் தேங்கி நிற்கும் கழிவுநீர் சாக்கடை கால்வாய்கள் தூர் வாரப்படாமல் இருப்பதும், அதற்கு அருகிலிருக்கும் கழிவுநீர் குளமும்தான் இதுபோன்ற மர்மக் காய்ச்சலுக்கு காரணியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சித் தரப்பில் இதுகுறித்து உண்மைத்தன்மையை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.