ஆசிரியர்களும், மாணவர்களும் சமூக மாற்றத்துக்கான சிற்பிகளாக விளங்குவதாக பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் அ. கணபதி தெரிவித்தார்.
திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறை சார்பில், இக்காலப் படைப்புகளில் தமிழகத் தேவைகளும், தீர்வுகளும் எனும் தலைப்பில் இருநாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில், கருத்தரங்க ஆய்வுக் கோவை மலரை வெளியிட்டு பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் அ.கணபதி பேசியது: தமிழ்துறை ஆய்வு என்றாலே சங்ககால இலக்கியம் என்ற ஒற்றை புள்ளியை நோக்கி பயணத்தி வரும் சூழலில், தமிழகத்தின் தேவைகளும்,தீர்வுகளும் எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழ் இலக்கியங்கள் மற்றும் அதன் சிறப்புகளை மட்டுமே ஆய்வு செய்யாமல் இக்கால சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டின் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. எனவே, தமிழ்த்துறை மாணவர்கள் அத்தகைய பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். உயர்கல்வி பெறுவோர் விழுக்காடு 25 சதமாக உள்ள நிலையில் சமூக மாற்றத்துக்கான சிற்பிகளாக ஆசிரியர்களும், மாணவர்களுமே உள்ளனர்.எனவே, இரு சமுதாயமும் தங்களுக்குள்ள பொறுப்புகள், கடமையுணர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி. ஆன்ட்ரூ தலைமை வகித்தார். தூய வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் ஞா. லெயோனார்டு வாழ்த்திப் பேசினார். தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் அ. மார்க்ஸ், தமிழாய்வுத் துறைத் தலைவர் பி. செல்வக்குமாரன், இணைப்பேராசிரியர் அ. குழந்தைசாமி, உதவிப் பேராசிரியர் அ. மரியதனபால் ஆகியோர் பேசினர். இதில், ஆய்வு மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள்என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 2 நாள்களுக்கு கருத்தரங்கு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை நிறைவு விழா நடைபெறுகிறது.