திருச்சியில் பைக் மீது லாரி மோதல்: இளைஞர்கள் இருவர் சாவு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
 திருச்சி உறையூர் நெசவாளர்காலனி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த குமார் மகன் தனசேகர் (19). கே.கே. நகர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவா (20), உறையூர் நாச்சியார்கோயில் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் கெளதம் (23). நண்பர்களான இவர்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரே இருசக்கர வாகனத்தில் சமயபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை கெளதம் ஓட்ட, மற்ற இருவரும் பின்புறம் அமர்ந்திருந்தனர்.
கொள்ளிடம் பாலம் அருகே திருச்சி - சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் ஒய் ரோடு அருகில் வந்தபோது, காற்று பலமாக வீசியது. இதனால் இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையின் மையப்பகுதிக்கு சென்றதாம். அப்போது பின்புறம் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பார்சல் நிறுவன லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தனசேகர், சிவா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கெளதம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மாநகர வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான மதுரை மாவட்டம், திருமங்கலம் செங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாளை (57) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com