திருச்சியில், ரயில் என்ஜின் தாமாக ஓடிய சம்பவம் தொடர்பாக, ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பழுதான ரயில் என்ஜினை இழுத்து வந்த மாற்று என்ஜின் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாமலேயே சென்றது. பிறகு கோட்டை ரயில்நிலையத்துக்கும் முத்தரசநல்லூர் ரயில்நிலையத்துக்கும் அருகே தொழில்நுட்ப வல்லுநர்களால் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி குறிப்பிட்ட அந்த ரயில் என்ஜினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். எலக்ட்ரிக்கல், இயக்கம், பாதுகாப்பு, மெக்கானிக் பிரிவு உள்ளிட்ட துறைகளிலிருந்து தலா ஒரு அதிகாரி வீதம் மொத்தம் 4 அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மனித தவறு காரணமாக இச் சம்பவம் நடைபெற்றதா? அல்லது இயந்திர கோளாறு காரணமாக நடைபெற்றதா? என்ற அறிக்கையை தாக்கல் செய்வர். இதற்கிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் உதயசந்திரனை பணியிடை நீக்கம் செய்து கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.