திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த மூதாட்டியை திருச்சி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் நடக்கும் திருட்டுகளை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் ஜூன் 1-ஆம் தேதி பிரபாத் ரவுண்டானா பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படி நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கோவை சாய்பாபா காலனி நாராயண குரு சாலையைச் சேர்ந்த அப்சலுதீன் மனைவி சமாபானு (என்கிற) ஆப்தாபேகம் (72) என்பதும், இவர் கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 40 குற்ற வழக்குகளிலிருந்து வெளியில் வந்தவர் என்பதும், தற்போது திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை, கண்டோன்மென்ட் காவல்நிலையங்களில் உள்ள 5 வழக்குகளில் நகைகள், செல்லிடப்பேசி திருட்டுகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார், ஆப்தாபேகத்தை கைது செய்ததுடன், அவரிடமிருந்து பதினைந்தே முக்கால் பவுன் நகைகள், ஒரு செல்லிடப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.