திருச்சி மாவட்டம். மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர்,திருவாசி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் உள்ள அரசு மணல் குவாரிக்கு வரும் லாரிகளை லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரத்தில் நிறுத்தியுள்ளனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருவாசி, கிளியநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது.
இந்த குவாரிக்கு மணல் எடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட லாரிகள் வந்தன. ஆனால் கிளியநல்லூர் ஊராட்சியில் மட்டும் 250 லாரிகள் உள்ளன. இந்த மணல் லாரிகளுக்கு மட்டுமே தினசரி மணல் ஏற்றப்பட்டது.
இதனால் பிற லாரி ஓட்டுநர்களுக்கு மணல் கொடுக்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மணல் ஏற்றாத லாரிகளை லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் உள்ள தனியார் இடத்தில் நிறுத்த முடிவு செய்து 500க்கும் மேற்பட்ட லாரிகளை கடந்த 2 நாள்களாக நிறுத்தி வருகின்றனர்.
இந்த லாரிகளால் திருச்சி சிதம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்தும் ஏற்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த அகிலாண்டபுரம், கீரமங்கலம், தாளக்குடி, முத்தமிழ்நகர் ஆகிய கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லாரிகளை விரைவில் அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியலைக் கைவிட்டனர்.