திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சின்னதுரை (25). கட்டடத் தொழிலாளி. இவர் திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே தங்கி, அங்கேயே கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
செவ்வாய்க்கிழமை காலை குழாய் மூலம் கட்டடத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாராம். அப்போது மின்மோட்டாரிலிருந்த வயரின் வழியாக அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சின்னதுரையின் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.