திருச்சி மாநகராட்சியில் 195 மையங்கள் மூலமாக பொதுமக்களிடமிருந்து எளிதில் மக்காத 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களிடமிருந்து தினசரி உற்பத்தியாகும் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்க இயலாமல் அப்படியே பெறப்படுவதால், அவைகளை பாதுகாப்பான முறையில் அழிக்கவோ அல்லது இயற்கை உரம் தயாரிக்க இயலாததால், சுற்றுப்புறச் சூழல் மிகவும் பாதிப்படையும் சூழல் நிலவியது.
எனவே, வாரத்தில் புதன்கிழமைகளில் மட்டும் மக்காத குப்பைகள் பெறப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை ஜூன் 5 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, மாநகரில் 195 மையங்களில் பொதுமக்களிடமிருந்து மக்காத குப்பைகள் பெறப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட எளிதில் மக்காத 13 டன் குப்பைகளை உலர் கழிவு விற்பனையாளர்களிடம் ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தொகை துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகைûயாக வழங்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
முன்னதாக, மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்காத குப்பைகள் சேகரிக்கும் பணியைப் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையர்கள் பிரபாகரன், தயாநிதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.