திருச்சியில் வியாழக்கிழமை அதிகாலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை வழக்குரைஞரின் மனைவி உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி (32). சென்னை வண்டலூர் மூகாம்பிகை கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் சக்கரபாணி (55). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை முதுகுளத்தூர் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அதற்காக சென்னையிலிருந்து சக்கரபாணி அவரது மனைவி வள்ளிமயில், ஆறுமுகசாமி அவரது மனைவி சங்கீதா (26) ஆகிய 4 பேரும் கார் மூலம் புதன்கிழமை இரவு புறப்பட்டனர். காரை சென்னையைச் சேர்ந்த ஆனந்த் ஓட்டினார். வியாழக்கிழமை அதிகாலை திருச்சி ஸ்ரீரங்கம் அருகே ஒய்ரோடு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த மற்ற 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்துபோன சங்கீதாவுக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. கார் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், மருத்துவமனையிலிருந்து அவர் தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.