திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒருவர் காயமடைந்தார்.
திருச்சி மத்திய சிறையின் சி.பி. 5-ஆவது பிளாக்கில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள செல்வம், வீரையன், ராஜா உள்ளிட்ட பல்வேறு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், புதன்கிழமை மாலை செல்வம் மற்றும் வீரையன், ராஜா ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீரையன், ராஜா இருவரும் சேர்ந்து செல்வத்தை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கண் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த செல்வத்துக்கு, சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை செல்வத்தின் கண் மற்றும் முகம் அதிகமான வீக்கத்துடன் காணப்பட்டதால், அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து, வீரையன் மற்றும் ராஜா இருவரும் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
10-வது நாளாக உண்ணாவிரதம்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலமேகம். நக்ஸல் தீவிரவாதியான இவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீஸார் தன்னை தாக்கியதைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நீலமேகம், 10 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.