திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் பகுதிகளில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முசிறி அருகே தொட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் தேவராஜ் (23). பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்.
இவர், சனிக்கிழமை காலை முசிறி பேருந்து நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். துறையூர்-முசிறி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி அருகே சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், தேவராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்குவந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தேவராஜின் சடலத்தை போலீஸார் எடுக்கவிடாமல், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன், முசிறி காவல் ஆய்வாளர் பறவாசுதேவன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், மறியல் கைவிடப்பட்டது.
விபத்து குறித்து முசிறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாலை மறியலால் முசிறி- துறையூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொட்டியம் அருகே ஒருவர் சாவு: தொட்டியம் வட்டம், மேய்க்கல்நாயக்கன்பட்டி அருகேயுள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மருதைவீரன் (51). இவர், சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் ஏலூர்பட்டிக்கு சென்றுவிட்டு, வீடுதிரும்பும் வழியில் மாராச்சிப்பட்டி பிரிவு சாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
காட்டுப்புத்தூர் போலீஸார் மருதைவீரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.