திருச்சியில் காதலியுடன் விஷம் குடித்த சட்டக் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் காதலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி பொன்மலை ஜீ கார்னர் அருகே மாநகராட்சி மாடுவதைக்கூடம் அருகே திங்கள்கிழமை தொழிலாளர்கள் சென்ற போது, அப்பகுதியில் ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர். இவர்களுக்கு அருகில் பைக் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர்கள் கண்டோன்மென்ட் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்து போலீஸார் பார்த்த போது, இளைஞர் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். உயிருக்குப் போராடியபடி கிடந்த அப்பெண்ணை போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்தவரின் செல்லிடப்பேசி, அடையாள அட்டை ஆகியவற்றை வைத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர், ஈரோடு மாவட்டம் சித்தோடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பிரகாஷ் (21). திருச்சி சட்டக்கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருபவர் என்பதும், அந்தப் பெண், ஈரோடு மாவட்டம் பவானி பிரதான சாலை அல்லியூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரனின் மகள் அட்சயா (17). அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருவதும், இருவரும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அட்சயா, பிரகாஷூடன் பைக்கில் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, ஜீ கார்னர் பகுதியில் இருவரும் பூச்சி மருந்து குடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.