திருச்சி மாநகராட்சி குப்பைக் கிடங்கில் 2-ஆவது நாளாக எரிந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் புகை மூட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்துள்ளது.
திருச்சிஅரியமங்கலம் பகுதியில் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் 40 முதல் 60 அடி உயரத்துக்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. இவற்றை கடந்த சில ஆண்டுகளாக முற்றிலுமாக அழிக்க முடியவில்லை. இயற்கை உரங்களுக்கு பயன்படுத்திய குப்பைகள் போக ஏராளமான குப்பைகள் தேங்கியுள்ளதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் குப்பைக்கிடங்கில் தீ பற்றி எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரவு பகலாக தீயணைக்கும் பணிகள் தொடர்ந்தன. 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்தது. அதன்பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ பற்றாத பகுதிகளில் குப்பைகளில் தண்ணீரை அடித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டன.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், புகைமூட்டம் அம்பிகாபுரம் பகுதியையே சூழ்ந்துள்ளது. இதனால் அம்பிகாபுரம் பகுதியில் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் அல்லி, பொறியாளர் அமுதவள்ளி ஆகியோர் முகாமிட்டு தேவையான பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை குழுவினர் சுழற்சி முறையில் இரவு பகலாக சிகிச்சை அளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.