காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் மார்ச் 22-ஆம் தேதி, சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 6-ஆவது நாளாக நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில தலைவர் சுப்பிரணியன் கூறியது: கடந்த 14-ம் தேதி முதல் நடந்து வரும் இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளோம். எங்களது 20 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும். பின்னர் 22-ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் முன் சுமார் 10,000 பேருடன் பெருந்திரள் முறையீடு போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.