மாணவர்கள் வெற்றி பெறும் வரை உழைக்க வேண்டும் என்றார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ. கணபதி.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
பெரிதாக சிந்தித்து, அதற்காக உழைத்தால் பெரிய அளவிலான வெற்றியை ஈட்டலாம். வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் இருக்கும். தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு, வெற்றி பெறும் வரை தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களது அறிவுசார் வளத்தை புதுமைகளை கண்டுபிடிப்பதிலும், நாட்டுக்காக சேவை செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாள்தோறும் கற்று, உங்களது அறிவுத்திறனை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பயின்ற 1,117 பேருக்கும், முதுகலைப் பட்டம் பயின்ற 733 பேருக்கும், 138 பேருக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம் என மொத்தம் 1,988 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கியும், இதில் சிறப்பிடம் பெற்ற 28 பேரை சான்றிதழ் வழங்கியும் துணைவேந்தர் பாராட்டினார்.
முன்னதாக, விழாவுக்கு மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் த. பால்தயாபரன் வரவேற்றார்.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.