பழங்காலப் பொருள்கள், நாணயங்கள், பணத்தாள்கள் கண்காட்சி
அருங்காட்சியகத் தினத்தையொட்டி திருச்சி கோட்டை பகுதியிலுள்ள அருங்காட்சியகத்தில் பழங்காலப் பொருள்கள், நாணயங்கள், பணத்தாள்கள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சியைச் சேர்ந்த நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் பழங்காலப் பொருள்கள் சேகரிப்பாளர்கள் பி.விஜயகுமார், முகமது சுபேர், சந்திரசேகரன் உள்ளிட்டோர் இணைந்து நடத்திய கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இச்சிறப்புக் கண்காட்சியில் உலக நாடுகளின் அனைத்து காகிதப் பணத்தாள்கள், பிளாஸ்டிக் பணத்தாள்கள், சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சரித்திர நாணயங்கள், பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா காலத்தில் இருந்த நினைவு நாணயங்கள், பல்வேறு பண்டமாற்று முறைகளில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் குறியீடு முறைகள், அரசு முத்திரைகள், அரசர்களின் உருவம் பொறித்த நாணயங்கள், அரசு மதிப்பு நாணயங்கள், தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, பித்தளை, நிக்கல், அலுமினியம் ஆகியவற்றில் தயாரான நாணயங்கள் முதல் தற்போது புழக்கத்திலுள்ள நாணயங்கள் வரை இடம் பெற்றிருந்தன.
மேலும் நாணயங்களின் வடிவம் சதுரம், செவ்வகம், அறுங்கோணம் என பலவடிவங்களில் மாற்றம் பெற்றதை விளக்கும் வகையிலான படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மரப்பாச்சி பொம்மைகள், எடைக்கற்கள், எடைக் கருவிகள், காசுமாலைகள், அணிகலன்கள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சி ஏன்: ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொல்லியல் சார்ந்த பொருள்கள், வரலாற்றாய்வுப் பொருகள் போன்றவற்றை காட்சிப்படுத்தி கரூவூலமாக வைத்திருப்பது அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அருங்காட்சியகத் தினத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதாக அமைப்பாளர்களில் ஒருவரான பி.விஜயகுமார் தெரிவித்தார்.