திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட அத்தையையும், அவரது மகனையும் அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராமசாமி. இவர் இதே பகுதியில் வசித்த தனது தங்கை தனபாப்புவிடம் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் கடனாக பெற்றிருந்தாராம். தனபாப்பு அந்த தொகையை வெளிநபர்கள் சிலரிடம் கடனாக பெற்று அண்ணனிடம் கொடுத்திருந்தார். கொடுத்த கடனை தனபாப்பு திருப்பி கேட்டபோது, கொடுக்க முடியாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஷம் குடித்து ராமசாமி தற்கொலை செய்து கொண்டார்.
ராமசாமி உயிரிழந்ததால், அவரது ஒரே மகன் ராஜகோபால் (38) மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் தனபாப்புவிடம் பணத்தை திருப்பி கேட்கவும், அவர் ராஜகோபாலிடம் பணத்தை தருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தனபாப்புவின் கணவர் பழனிசாமி தனது நண்பர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். அன்றிரவு வீட்டில் தனபாப்பு (52), அவரது மகன் சத்தியமூர்த்தி (33) ஆகிய 2 பேர் மட்டுமே உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் கடப்பாரையால் தலையில் அடித்து ராஜகோபால் கொலை செய்துள்ளார். பின்னர், அவர்கள் இருவரின் உடல்களையும் வீட்டின் வெளியே எடுத்துவந்து, தெருவில் கிடத்தி டிராக்டரை ஏற்றி நசுக்கியுள்ளார். பிறகு அங்கிருந்து ராஜகோபால் தப்பியோடிவிட்டார்.
புகாரின்பேரில், லால்குடி காவல் ஆய்வாளர் தினேஷ்குமார் வழக்குப் பதிந்து ராஜகோபாலை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.