திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த 17 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக மட்டும் செயல்படுவதாகவும், இதனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் மீது குண்டர் சட்டத்தில் கைதுசெய்தல், பொய் வழக்கு பதிவு செய்து கைதுசெய்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் வி. மகாராஜன் தலைமையில் அவ்வமைப்பைச் சேர்ந்தேர் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வந்தனர்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் முன் போலீஸார் குவிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். அப்போது, ஒரு வாகனத்தில் 20-க்கும் மேற்பட்டஇளைஞர்கள் வந்தனர். அவர்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதே நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்குள் காரில் நுழைய முயன்ற மகாராஜனையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பிறகு போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவருடன் வந்த இளைஞர்கள் 16 பேரையும் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.