திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மேலும் இருவரை சிபிஐ போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி நவல்பட்டு பகுதியில் அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் பாதுகாப்புத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தத் தேர்வில் சிலர் முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன. அதாவது தேர்வு அழைப்பாணையில் விண்ணப்பதாரரின் புகைப்படத்தை மாற்றி, அவருக்கு பதிலாக வேறு நபர் தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில், இதுதொடர்பாக சிபிஐ போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சிலர் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றுவதாக சிபிஐ போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செயன், மற்றும் ராம்கோபால் ஆகிய இருவரையும் சிபிஐ போலீஸார் கைது செய்துள்ளனர்.