டெங்கு காய்ச்சல் பீதியை பயன்படுத்தி விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களை நம்ப வேண்டாம் என ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெயிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டெங்கு காய்ச்சல் குறித்த பயம் பொதுமக்களிடத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்து கொண்ட போலி சித்த மருத்துவர்கள், போலி ஆயுர்வேத, போலி ஹோமியோபதி, போலி இயற்கை மருத்துவர்கள் உள்ளிட்டோர் டெங்கு காய்ச்சலை தடுக்கும் சிறப்பு மருந்துகள் இருப்பதாகவும், ஓரிருநாளில் நோயை குணப்படுத்துவதாகவும் பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் தகவல் பரப்பி வருகின்றனர்.
இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும் தங்கள் வீடுகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு பாரம்பரிய மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதாக கூறும் நபர்களையும் நம்ப வேண்டாம். அவர்களிடம்மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதல் உள்ளதா என விவரம் கேளுங்கள்.
அவ்வாறு ஒப்புதல் இல்லாத நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலரை 7708068802 என்ற எண்ணிலும் அல்லது, சுகாதாரத்துறை இணை இயக்குநரை 9842482209 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.