திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை நள்ளிரவு டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் தங்கப்பெருமாள்(32). இவருக்கு திருநெல்வேலி கீழராமநேரி பூர்வீகம். சொந்த ஊருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மனைவி சந்தனகுமாரி(28) மற்றும் உறவினர்களுடன் வந்த தங்கப்பெருமாள் செவ்வாய்க்கிழமை இரவு வாடகை காரில் வேலூருக்கு புறப்பட்டார். காரை ராஜா கிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்தார். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தாம்பட்டி விளக்குப் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் தங்கப்பெருமாளின் மனைவி சந்தனகுமாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணம் செய்த தங்கப்பெருமாள், நிவேதா (25), தன்சிகா(5), மேகலா (4) மற்றும் ஓட்டுநர் ராஜா கிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.