திருச்சியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ராமலிங்க நகர் கார்மல் கார்டனைச் சேர்ந்த தேவிகா என்பவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது, மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், குமாரவயலூர் பாரதி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜம்புகேஸ்வரன் (29) என்பவரை கடந்த ஜூன் 10-ஆம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஜம்புகேஸ்வரன் மீது ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், பொன்மலை, அரியமங்கலம், விமான நிலையம், அரசு மருத்துவமனை, பாலக்கரை, காந்திமார்க்கெட், உறையூர், கோட்டை, நவல்பட்டு காவல்நிலையங்களில் 15 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், ஜம்புகேஸ்வரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை இரவு ஆணை பிறப்பித்தார்.