தங்களுக்கு மிக விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
திருச்சியில் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமான தினமலர் ஆசிரியர் ஆர். ராகவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பறவைகள் சாலையிலுள்ள அவரது இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆறுதல் கூறிய பின்னர் அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திரமோடியை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்த நிலையில், முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, தான் பிரதமரைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை, தங்களுக்குள் கருத்து வேறுபாடும் இல்லை என்று துணை முதல்வரே தெரிவித்திருக்கிறார். இரட்டை இலை சின்னம் பெற ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பெற்றது தொடர்பாக விசாரணையும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்விரு வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்துக் கூற விரும்பவில்லை. அதிமுகவில் மீண்டும் தினகரன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என நீங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு தனிபட்ட நபர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தங்கள் அணிக்கு விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றார் தம்பிதுரை.