திருச்சியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் கிளியனூர்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பிக்குநல்லான் மகன் தனசேகர் (43), திருச்சி மன்னார்புரத்தில் உள்ள திருச்சி மாநகர மின்வாரிய அலுவலக லைன்மேன். சனிக்கிழமை பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் இருந்த மின்மாற்றியில் ஏறி, பழுதை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கட்டியிருந்த கயிறு நழுவி, மின் கம்பியில் தவறி விழுந்தார். இதனால் ஏற்பட்ட மின் அதிர்ச்சியில் நிலைதடுமாறிய அவர், மின்மாற்றி கம்பியில் மோதி கீழே விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தனசேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பொன்மலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.