இந்தியப் பொறியாளர்கள் கழகம் வழங்கும் பாதுகாப்பு புதுமை புனைவுக்கான விருதை திருச்சி பெல் நிறுவனம் தொடர்ந்து 3-ஆவது முறையாக வென்றுள்ளது.
புதுதில்லியில் செப். 6-ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்பிற்கான பன்னாட்டுக் கருத்தரங்கில், தில்லி மாநில அரசின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி மெட்ரோ ரயில் கழக மேலாண்மை இயக்குநர் மங்குசிங் ஆகியோர் முன்னிலையில் பெல் நிறுவனத்தின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான கூடுதல் பொது மேலாளர் டி. பாஸ்கரன் மேற்கண்ட விருதைப் பெற்றுக்கொண்டார். பாதுகாப்பில் புதுமைகளைப் புகுத்தி, உன்னதத்தை எட்டிடும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை திருச்சி பெல் நிறுவனம் தொடர்ந்து 3-ஆவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதில் ஒரு பட்டயமும், சான்றிதழும் அடங்கும்.
நாட்டின் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுள், பாதுகாப்பில் பல்வேறு வழிகளில் புதுமையான முறைகளைக் கையாளுதல், ஊழியர்களிடையே பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்காணித்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.