பட்டம் பெற்று பணியில் சேரும் மாணவிகள் தங்களின் கல்வி அனுபவத்தை சமுதாயத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப. மணிசங்கர்.
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதுநிலைப் பிரிவு மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக அளவில் தகுதி பெற்ற 30 மாணவிகள் உள்பட 535 பேருக்குப் பட்டங்களை வழங்கி, மேலும் அவர் பேசியது:
இன்றைய உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியாரின் கனவை பெண்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
பட்டத்தோடு படிப்பு முடிந்தது எனக் கருதாமல் கல்விக் கற்பது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். பட்டம் பெற்று பணியில் சேர்ந்த பின்னர், தங்களின் கல்வி அனுபவத்தை சமுதாயத்துக்காகப் பயன்படுத்த வேண்டும். எந்த நிலையில் இருந்தாலும் சவால்களைச் சந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும். வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்துவிடாது. கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு இருந்தால் எளிதில் வெற்றி அடையலாம்.
சிந்தித்தல், கவனச்சிதறல் புறம் தள்ளுதல், பொறுப்புகளை ஏற்றல், வித்தியாசமான செயல்பாடுகளால் வெற்றி வசமாகும் என்றார் மணிசங்கர். பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரிச் செயலர் எஸ். குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். மாணவிகள், பெற்றோர், துறைத் தலைவிகள், பேராசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் எஸ். வித்யாலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர் ரமா நன்றி கூறினார்.