திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில், வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், இலங்கையைச் சேர்ந்த மகேந்திரன் (45) என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு, சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தோணியில் செல்ல முயன்றதாக கியூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அவர், தனது மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை வெளியில் இருந்து சந்திப்பதாகவும், விதிகளுக்கு புறம்பாக நீண்ட நாள்கள் சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் கூறி ஏற்கெனவே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த 3 நாள்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அகதிகள் முகாம் துணை ஆட்சியர் தரப்பினர் அவரிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.