திருச்சி ஜங்சன் ரயில்வே மேம்பாலப் பணிக்காக மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தை வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு திருச்சி தூய்மை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜங்சன் பகுதியில் நான்கு திசைகளிலும் சாலைகளை இணைக்கும் வகையில் வட்டவடிவ மேம்பாலம் அமைக்க முடிவாகி அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரயில்வே துறை சிறிது இடம் தந்து அணுகு சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இடம் தந்து, அங்கும் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தில் கேட்கப்படும் இடத்தின் அளவு சுற்றுச்சுவர் ஓரத்தின் சிறிய இடம் மட்டுமே.
ராணுவம் உரிய இடத்தை வழங்காததால், மன்னார்புரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கீழே நேராகச் செல்கின்றன. ஜங்சனிலிருந்து எடமலைப்பட்டிபுதூர் செல்லும் வாகனங்கள் எந்த வழியில் செல்வது என்று புரியாத நிலையில் சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காலதாமதம் இல்லாமல், சாலை அமைக்கத் தேவையான இடத்தை வழங்க உதவிட வேண்டும்.