பெரம்பலூர் எம்ஆர்எப் டயர் நிறுவனத்துக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் எம்ஆர்எப் டயர் கம்பெனிக்கு ஒர்க்மென் அப்ரண்டீஸ் பணிக்கு ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணியிடத்துக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ ஓராண்டு படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 முதல் 6 அடிக்கு மேல் உயரம், 50 கிலோ மற்றும் அதற்கு மேல் எடை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். 3 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாதம் ரூ.7,840 ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணிக்காக கும்பகோணத்தில் ஒரு மாதம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஒரு மாத பயிற்சிக்கு உணவு, தங்கும் வசதி இலவசம். இந்தப் பணிக்கு செல்ல விருப்பமுள்ள இளைஞர்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். அனைத்துக் கல்விச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றார் ஆட்சியர்.