திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே பள்ளிக் கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள், அவர்கள் பெற்றோர் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் நாகையநல்லூரில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருவதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட கல்வி அதிகாரிகள் கட்டடம் பழுதடைந்திருப்பதாகக் கூறி அவற்றை அகற்ற உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கட்டடம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், போதிய கட்டட வசதியின்றி மாணவ, மாணவிகள் அவதியுறுவதாக அவர்களது பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் காட்டுப்புத்தூர் மேய்க்கல்நாயக்கன்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தொட்டியம் போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரேவதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.