ரயில்வே துறையில் தனியார் மயத்தைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்துக்காக திருச்சி ஜங்ஷன் ரயில்நிலைய வாயிலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீபா தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களை அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார்தடுக்க முயன்றனர். அப்போது, போலீஸாரை தள்ளிவிட்டு அவர்கள் இரு குழுவாக பிரிந்து பிரதான வாயில் மற்றும் 2-ஆவது நுழைவாயில் வழியாக ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், புறநகர் மாவட்ட செயலாளர் எல். நாகராஜ், மாவட்ட செயாளர்கள் துரை.நாராயணன் ( புதுக்கோட்டை ), செந்தில்குமார் (தஞ்சை) மற்றும் 4 பெண்கள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.