திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2017-18 ஆம் ஆண்டில் இதுவரை 11,855 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.82 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மனவளர்ச்சிக்குன்றிய 9,105 பேர், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 610 பேர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 272 பேர் என மொத்தம் 9,987 பேருக்கு ரூ. 15 கோடியே 85 லட்சத்து 31 ஆயிரத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 986 பேருக்கு ரூ.33.13லட்சம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 24 பேருக்கு ரூ.7 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மனவளர்ச்சிக் குன்றியவர்களை பாதுகாக்கும் இல்லத்துக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ. 9.14 லட்சம், சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் 69 பேருக்கு ஊதிய மானியமாக ரூ. 82.80 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தெருக்களில் கேட்பாரற்று திரிந்த மனநோயாளிகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 8 பேர் மீட்கப்பட்டு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். மூன்று சக்கர மோட்டார், செயற்கை அவயங்கள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், 42 பேருக்கு ரூ. 24.71 லட்சத்தில் செயற்கை அவயம், 10 பேருக்கு பிரெய்லி கடிகாரம், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 76 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முகாம்கள் நடத்தப்பட்டு 466 பேருக்கு ரூ.18.77 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டு இதுவரை, மாவட்டம் முழுவதும் 11,855 பேருக்கு ரூ. 17 கோடியே 82 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும். தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.