திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பும் தகவல் கேட்டு அரசுப் பேருந்து நடத்துநர் மாரடைப்பில் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சி அருகேயுள்ள கல்லணை பூண்டிமாதாகோயில் தெருவைத் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர் திருச்சி புறநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.
தொமுச சங்கத்தில் உறுப்பினராக இருந்த இவர் போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது. போராட்டத்திலிருந்து வீட்டுக்கு புதன்கிழமை இரவு வந்த வெங்கடேசனுக்கு, இந்த தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
அவரது குடும்பத்தினர் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக, ஏஐடியூசி மாநில துணைப் பொதுச் செயலர் மணி கூறியது: அரசுப் போக்குவரத்துக் கழகமும், தமிழக அரசும் தொடர்ந்து தொழிலாளர்களை மரணத்துக்குள்ளாக்கி வருகிறது. போராட்ட காலத்தில் கல்லணையைச் சேர்ந்த வெங்கடசேன் உள்பட இதுவரை 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசு நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.