சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை திருச்சி வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக திருச்சியில் சனிக்கிழமை சந்தித்து பேசினர்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய நீதிமன்றங்கள், கட்டடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு திருச்சி வந்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை திருச்சி வழக்குரைஞர் சங்கத் தலைவர் கே. பன்னீர்செல்வன், செயலர் ஜே.கே. ஜெயசீலன், துணைத் தலைவர் கமால்தீன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில், திருச்சி வழக்குரைஞர் சங்கத்தின் விழாவில் தலைமை நீதிபதி பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அதன்படி, பிப்ரவரி 17 ஆம் தேதி விழாவில் பங்கேற்பதாக அவர் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது, முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி லோகேசுவரன், மூத்த வழக்குரைஞர் ராஜகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.