திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் தாக்கியதாக 5 பெண்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
முசிறி காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் 3 போலீஸார் துறையூர் அருகே ஜம்புநாதபுரம் கிராமம் குறவர் தெருவுக்கு வியாழக்கிழமை சென்றனர். அங்கு மூங்கில் கூடை முறம் செய்து விற்கும் சரத்குமார் மனைவி சங்கீதா(22), சுந்தராஜ் மனைவி சித்ரா(45), மருதை மனைவி வள்ளி(45), சிவக்குமார் மனைவி ஜெயக்கொடி(25), கணபதி மனைவி ஜீவா(45) ஆகியோரை ஆய்வாளர் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி முசிறி காவல் நிலையம் அழைத்துச் சென்று பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக அடித்து விசாரணை செய்த போலீஸார், ஒரு கட்டத்தில் திருடியதாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை இரவு அவர்களை விடுவித்த முசிறி போலீஸார், தாங்கள் தாக்கியதாக வெளியே சொன்னால் பாலியல் வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டி அனுப்பினராம். ஜெம்புநாதபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கும் தங்களை முசிறி காவல் ஆய்வாளர் சந்தேக வழக்கில் கைது செய்து தாக்கியது அதிர்ச்சியாக உள்ளது என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.