திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடி நீர் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், எம்.புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குடித்தெரு பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடத்துடன் தொட்டியம் - காட்டுப்புத்தூர் சாலையில் எம். புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் மற்றும் தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.