திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே குடும்பத் தகராறில் மனைவி, மகளை அரிவாளால் வெட்டிய விவசாயி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தொட்டியம் அருகே மேலகார்த்திகைப் பட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னையன் (65). இவரது மனைவி புஷ்பா(54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கிய உறவினர் பெண்ணை சின்னையன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அப்போதிலிருந்து சின்னையனுக்கும், புஷ்பாவிற்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த சின்னையன், மனைவி புஷ்பா, மகள் பூங்கொடி இருவரையும் அரிவாளால் வெட்டினார். காயமடைந்த இருவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தொட்டியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னையனைக் கைது செய்தனர்.