திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பொறியாளர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பி.கே.புதூர் தெய்வசிகாமணிபுரம் பகுதியில் வசித்து வந்த ஜான் சேவியர் மகன் மோசஸ் ஜெயசிங் (32). கட்டுமானப் பொறியாளரான இவர், செவ்வாய்க்கிழமை இரவு சென்னை விரைவு ரயிலின் முன்பதிவு இல்லா பெட்டியில் ஏறினார்.
மணப்பாறை பகுதியில் ரயில் வந்துகொண்டிருந்தபோது, கதவின் அருகே நின்றுகொண்டிருந்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு சக பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு புதன்கிழமை காலை வந்த திருச்சி ரயில்வே காவல் உதவியாளர் லட்சுமி தலைமையிலான போலீஸார், மோசஸ் ஜெயசிங் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.