திருச்சி, பெல் நிறுவனத்தில் பற்றவைப்பாளர்கள் சுமார் 970 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு கோரி வெல்டர்ஸ் அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் கடந்த 2ம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணிகள் பாதிக்கப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட வெல்டர் சங்கத் தலைவர் செயலாளர் உள்பட 9 பேரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. மேலும் 14 பேரை வடமாநிலங்களில் உள்ள பெல் நிறுவனங்களுக்கு பணியிட மாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்தது.
இதனை திரும்ப பெறக் கோரி பெல் அனைத்து தொழிற்சங்கம் சார்பில், பிரதான வாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெல் தொழிற்சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும், பெல் தொ.மு.ச. துணைத் தலைவருமான செந்தில்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஏ.டி.பி. தொழிற்சங்க நிர்வாகி கார்த்திக், அம்பேத்கர் யூனியன் நிர்வாகி ஜெகதீசன், பி.எம்.எஸ். நிர்வாகி சங்கர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.