மணப்பாறையில் தனக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மீது பெண் காவல் உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சூரியகலா. திண்டுக்கல் மாவட்டம் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த இவர் பாத்திமா மலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவருக்கும் மணப்பாறையில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் இருவீட்டர் சம்மத்துடன் திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் ஜூலை 5-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றது. செப்டம்பர் 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணப்பாறையில் திருமணம் நடப்பதாகவும், 13-ஆம் தேதி திண்டுக்கல்லில் வரவேற்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அருண்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் வீட்டாரை தொலைபேசியில் அழைத்து திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் சூரியகலா, மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வாசுகி, திருமணத்தை நிறுத்திய அருண்குமார், அவரது தாயார் மல்லிகா, சகோதரி ஜெயபிரபா மற்றும் அவரது மாமா கிருஷ்ணன் ஆகியோர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், அருண்குமாரும், சூரியகலா தனக்குள்ள மஞ்சல்காமாலை நோயை மறைத்து திருமணம் செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளார்.