டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை பெங்களூரு ஓபன் டென்னிஸ் பந்தயத்தை தொடக்கி வைத்து அவர் பேசியது: அண்மைக்காலமாக விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த வீரர்கள் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர். அனைத்து விளையாட்டுகளின் தலைநகரமாக பெங்களூரு மாறி வருகிறது.
டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளையும் மாநில அரசு ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளும். கடந்த ஆண்டு பெங்களூரு ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் வரை பரிசளிக்கப்பட்டது. நிகழாண்டு அது 1500 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு 1 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.