கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.58 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என கர்நாடக தொழில் மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு பதவியேற்ற போது, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ. 2 ஆயிரம் கோடியாக இருந்தது. அரசின் தொடர் நடவடிக்கைக்குப் பிறகு அது ரூ. 38 கோடியாக குறைந்தது. பழைய நிலுவையான ரூ. 20 கோடியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 58 கோடி மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
ஆனால், விவசாயிகள் இன்னும் பல கோடிகள் நிலுவைத்தொகை உள்ளதாகக் கூறி வருகின்றனர். அதற்கான ஆவணங்களை விவசாயிகள் அரசிடம் ஒப்படைத்தால் சம்பந்தப்பட்ட கரும்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான தகவல் தெரிவிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.