கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்க மாட்டோம்: சதானந்த கெளடா

கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசை கவிழ்க்க மாட்டோம் என்று மத்திய  புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசை கவிழ்க்க மாட்டோம் என்று மத்திய  புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் சாலையை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு  நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சதானந்த கௌடா செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசில் குழப்பமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டு கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிக்காது. ஆனால் கூட்டணி அரசு கவிழ்ந்தால்,  ஆட்சியை பிடிப்பதிலிருந்து பாஜக பின்வாங்காது.
கூட்டணியில் ஒற்றுமையில்லாததால், இரு கட்சிகளிலும்   உள்கட்சி பூசல் எழுந்துள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பலர் அந்தந்த கட்சிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு கவிழ வாய்ப்புள்ளது. 
செல்வந்தர்களின் ஆதரவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது என்று முதல்வர் குமாரசாமி தொடர்ந்து கூறி வருவதில் உண்மை இல்லை.  செல்வந்தர்களை முதல்வர் பக்கத்திலேயே வைத்துகொண்டு, பாஜக மீது குறை கூறுவது நியாயமல்ல. 
மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்த நாள் முதலே மஜத, காங்கிரஸ் கட்சிகளில் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது வீதிக்கு வந்துள்ளது. தங்கள் மீதான தவறை மறைக்க முதல்வர் குமாரசாமி,  எதிர்க்கட்சியினரைக் குற்றஞ்சாட்டி வருகிறார். 
கர்நாடகத்தில் மழை, வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத  அரசு,  பிரச்னையை திசை திருப்ப, பாஜகவை குறை கூறி வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com