டிப்ளமோ மாணவர்கள் பிற்சேர்க்கை மூலம் தொழில்கல்வி சேர்க்கைக்கான இரண்டாம் சுற்றில் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யும் நடைமுறை
தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டில் பொறியியல் போன்ற தொழில்கல்வி கல்லூரிகளில் டிப்ளமோ மாணவர்களை பிற்சேர்க்கை திட்டத்தின் கீழ் 2-ஆவது ஆண்டில் சேர்ப்பதற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், பொறியியல் பட்டப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்காக விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும். அதற்கான இரண்டாம் சுற்று விருப்பப்பாடங்கள், கல்லூரிகள் பதிவு நடைமுறை திங்கள்கிழமை தொடங்கியது. செப்.19-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம். அதனடிப்படையில், செப்.20-ஆம் தேதி காலை 11 மணிக்கு www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் இறுதிச்சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பிறகு, கல்லூரிவாரியாக, பாடப்பிரிவு வாரியாக கட்-ஆஃப் தரவரிசைப்பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதை மாணவர்கள் அறியலாம். ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் அடிப்படையில் மாணவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். செப்.20 முதல் செப்.24-ஆம் தேதிவரை மாணவர்கள் தங்கள் சேர்க்கையை உறுதி செய்து, உரிய கல்வி கட்டணங்களைச் செலுத்தி, இணையதளத்தில் இருந்து சேர்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆணையின் அடிப்படையில், செப்.25-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.