கூட்டணி அரசை கவிழ்க்க நினைக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் முயற்சி பலிக்காது என தோட்டக்கலைத் துறை அமைச்சர் எம்.சி.மனகொலி தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை பொறுக்க முடியாத பாஜக, அரசை கவிழ்க்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பாஜக என்ன முயற்சி செய்தாலும், அரசைக் கவிழ்க்கும் முயற்சி நிறைவேறாது. எடியூரப்பாவின் முதல்வராகும் கனவும் ஈடேறாது.
மேலும், அமைச்சர் டி.கே.சிவக்குமாரை வழக்கில் சிக்கவைத்து அவரைக் கைது செய்வது இயலாது. அவர் சிறைக்கு செல்வார் என்ற பிரச்னையும் எழாது. மாநிலத்தில் அதிகாரத்தில் இல்லாத பாஜகவினர் தரையில் விடப்பட்ட மீனைப் போல் தத்தளிக்கின்றனர். அதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் எந்த நிலைக்கும் செல்ல தயாராக உள்ளனர். இது அரசியல் நாகரீகம் இல்லை என்பதனை அவர்கள் உணர வேண்டும். மக்கள் பாஜகவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்றார்.