தொழில் நிறுவனங்கள், தொழில்சாலைகளில் காற்று, சூரிய ஒளி மின்சார பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வைனர்பர்கர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோன்நந்தா அப்பய்யா தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் காற்று, சூரிய ஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். பசுமை இந்தியாவை உருவாக்க காற்று, சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும்.
தெற்கு ஆசியாவில் களிமண்ணால் ஆனா செங்கல்களை உற்பத்தி செய்வதில் கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம் குனிகல்லில் உள்ள எங்கள் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. என்றாலும் எங்கள் தொழில்சாலைகளில் காற்று, சூரிய ஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறோம். இதனை மற்ற நிறுவனங்கள், தொழில்சாலைகள் நடைமுறைப்படுத்தினால், பசுமையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.
அண்மைக்காலமாக சர்வதேச அளவில் காற்று, சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கும், பயன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார்.