கண்களை தானம் செய்வது அனைவரது சமூக கடமை என நடிகர் ஜெயராம் கார்த்திக் தெரிவித்தார்.
பெங்களூரு கோரமங்களாவில் செவ்வாய்க்கிழமை அகர்வால் கண் மருத்துவமனை தொடக்க விழாவில் கலந்துகொண்டு, தனது கண்களை தானம் செய்த அவர் பின்னர் பேசியது: தேசிய அளவில் பார்வையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அது போன்றவர்களுக்கு கண்களை தானம் செய்வதன் மூலம் மீண்டும் பார்வை கிடைக்கும். ஆனால், கண்களை தானம் செய்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இதன் காரணமாக யாரும் கண்களை தானம் செய்ய முன் வருவதில்லை.
விபத்துகள் மட்டுமின்றி, இறப்பவர்களின் கண்களை அவர்களின் குடும்பத்தினர் தானம் செய்வதன் மூலம், பலருக்கு பார்வை கிடைக்கும் என்பதை உணர வேண்டும். இறப்பவர்களின் கண்களை புதைப்பதாலோ, எரிப்பதாலோ யாருக்கும் எந்த பயனும் இல்லை. மூடநம்பிக்கைகளை ஒழித்து, கண்களை தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். கண்களை தானம் செய்வது அனைவரின் சமூக கடமை என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அகர்வால் கண் மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் கிரண்ராஜு நாராயண், மண்டல மேலாளர் அமோத்நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.