பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்கும் பாஜக கனவு நனவாகாது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
இது குறித்து கோலாரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜக ஆட்சியை அமைக்க துடியாய் துடித்துக் கொண்டுள்ளது. பின்வாசல் வழியாக ஆட்சியை கைப்பற்றும் பாஜகவின் கனவு நனவாகாது. மஜத-காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து ஆட்சியைப் பறித்து பாஜக ஆட்சியை அமைக்க அக் கட்சி 4 முறை முயற்சித்துள்ளது. எல்லா முயற்சிகளிலும் பாஜகவுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. எதிர்காலத்திலும் பாஜகவுக்கு இதே
கதிதான்.
பாஜகவுக்கு ஆதரவாக மாற எண்ணியிருந்த காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்களும் மனம் திருந்தி கட்சியின்கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள எந்த எம்எல்ஏவிடமாவது ரூ.20-30கோடி பணம், அமைச்சர் பதவி தருவதாக சொன்னால் மனம் சஞ்சலம் அடைவது இயல்புதானே. அப்படி சஞ்சலம் அடைந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பியுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள், கட்சியைவிட்டு விலகி வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் அதை நாங்கள் தடுக்கமாட்டோம். ஆனால், கட்சிக்கு துரோகம் செய்ய யாரும் துணியக்கூடாது. எந்த கட்சியின் பெயரில், சின்னத்தில் வென்றோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் கட்சி மாறும் எண்ணத்தில் இல்லை.
காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுப்பதற்காக, பணத்தாசை காட்டி குதிரைபேரத்தில் ஈடுபட்டதற்காக பாஜகவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில், ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்முயற்சியில் ஈடுபட்டதால் தான் கூட்டணி கட்சிகள் பலமடைந்துள்ளன. மேலும் மக்களின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த ஒரே தளத்தில் ஒன்றாகியுள்ளோம்.
கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள எடுக்க வேண்டும். நமது நாட்டின் நலனைப் பாதுகாப்பதில் அரசியலுக்கு இடமில்லை.
நமது நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசும், பிரதமர் மோடியும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார் அவர்.